கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடுதல், உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.மேலும், மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக, நாளை (ஆக.10) நடைபெறவிருந்த நேரு டிராபி படகுப் போட்டியையும் கேரள அரசு ரத்து செய்தது.