தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.இந்த போலீஸ் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம்.
அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பின்பு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.மேலும் ஆத்திரமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.