மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க முயற்சி செய்யக் கூடாது வீட்டில் மின்சுவிட்சுகளை ஆன் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகளை இயக்கக் கூடாது. மேலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஈரப்பதமான சுவர் மீது கை வைக்க கூடாது.நீரில் நனைந்த ஃபேன், லைட் உள்ளிட்ட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் பயன்படுத்தக் கூடாது.மின்சாரம் இல்லை என்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்கக் கூடாது.
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கம்பிகள், பில்லர் பாக்ஸ் ட்ரான்ஸ்பார்மர் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்ல கூடாது.சாலைகளிலும் தெருக்களிலும் மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் ஓடுவது, நடப்பது, விளையாடுவது, வாகனத்தில் செல்வது கூடாது.தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்களுக்கு அருகில் செல்லக்கூடாது.மின்சார கம்பத்தில் அல்லது அதில் போடப்பட்ட ஸ்டேட் வயரின் மீது கொடிக்கயிறு கட்டி துணி காய வைக்க கூடாது. மேலும் மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
மின் சேவைகள் மின்கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்தாலும், மின்கம்பங்கள் உடைந்து இருந்தாலும், சாய்ந்திருந்தாலும் 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.