டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. ஆனால் அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது.இந்த வழக்கில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படு வந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் யாரும் எதிர்பாராத வகையில் இன்னும் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று கட்சிக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியினர் மத்தியில் பேசிய அவர், சட்டத்தின் நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இப்போது மக்களின் நீதிமன்றத்தில் நான் நீதியை பெறுவேன். மக்கள் எனக்குக் கட்டளை இட்டால் மட்டுமே நான் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன்.ஆதரவு கேட்டு மக்களிடம் செல்ல உள்ளேன். அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்க உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலை மகாராஷ்டிர தேர்தலுடன் வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேறொரு ஆம் ஆத்மி தலைவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.