திருச்சி மாவட்ட கலெக்டர் பிதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.இதில் அடுத்தடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைக்கோள் புகைப்படங்கள், பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் விவரங்கள், பேரிடரின் போது செய்ய கூடியவை, செய்யக்–கூடாதவை போன்ற அறிவுரைகள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம் போன்ற விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இலவச தொலை பேசி எண் 1077 (0431-2418995) என்ற எண்ணிலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை பொதுமக்கள் அனைவரும் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், அரசுசாரா அமைப்பி–னர் அனைவரும் பதிவிறக்கம் செய்திட கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.