முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்த ஆசிய HRD Awards நிறுவனம்!
ஆசிய HRD Awards சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு “வாழ்நாள் சாதனை யாளர் விருது” வழங்கப்பட்டது. பின்னர், ஆசிய HRD Awards நிறுவனரும், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான தத்தோ டாக்டர் பாலன் கூறியதாவது,12 வருடங்களுக்கு பிறகு இந்திய நாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கு முன்பு வாழ்நாள் சாதனையாளர் விருது பிலிப்பையன்ஸ் ஜனாதிபதி பிடல் வி. ராமோஸ் அவர்களுக்கும், போஸ்னியாவின் பிரதமர் ஹாரிஸ் டால்சுவேக் அவர்களுக்கும், மலேசியா நாட்டின் சராவக் முதலமைச்சர் அடேனம் சதேம் போன்ற பல தலைவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்றால், மனிதவள மேம்பாட்டிற்கு எந்த விதத்தில் அவர்களது பங்களிப்பு இருக்கின்றது என்பதை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது விழாவுடன், உலகளாவிய ஒரு மாநாடும் நாளை மற்றும் நாளை மறுநாள் ITC Chola-வில் நடக்கிறது. அங்கு ஏறத்தாழ 350 மனிதவள மேம்பாட்டு நிபுணர்களும் மற்றும் தலைமை நிருவாகிகளும் பல நாடுகளிலிருந்து ITC Chola-விற்கு வருகிறார்கள். இந்த நிகழ்வுடன் தான் இந்த விருது வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. இந்த வருடம் குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தேர்வு குழு விருப்பப்பட்டதற்குக் காரணம், தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்துத் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (Skills Development Corporation) மற்றும் Vocational Skills Development ஆகியவற்றின் மூலம் பல இலட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்திருக்கிறார்கள், வேலைவாய்ப்புகளை அதிகரித்திருக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையான, ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வி, மனிதவள மேம்பாடு இது தான் வறுமையை ஒழிக்கும் என்பதில் இக்குழு உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. இதற்காகதான் இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளர் விருது முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.